சின்ன வண்டிச்சோலை கன்டோன்மென்ட்
பள்ளிக்கு, சி.பி.எஸ்.சி.,யின் அங்கீகாரம் பெற, மாவட்ட
கல்வித் துறையின் தடையில்லா சான்று
கேட்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில்
உள்ள சின்ன வண்டிச்சோலை பள்ளி, கடந்த, 1927, ஜன.,
27ல், (பதிவு எண். 428/1927) அங்கீகாரம் பெற்று,
செயல்பட்டு வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ்
வாழும் மக்களுக்காக துவங்கப்பட்ட இப்பள்ளியில் தமிழ்
வழியில் கல்வி போதிக்கப்பட்டு வந்தது.
இதனால், மாணவர் எண்ணிக்கை, கடந்த, ஐந்தாண்டுக்கு
முன், 38 ஆக குறைந்தது. பின், சி.பி.எஸ்.சி., கல்வி
முறையில், ஆங்கில வழி போதனை துவங்கியதன்
விளைவாக, மாணவர் எண்ணிக்கை, தற்போது, 452 ஆக
உயர்ந்துள்ளது. இந்நிலையில், பள்ளிக்கு, சி.பி.எஸ்.சி.,
அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, சி.பி.எஸ்.சி., உதவி
செயலர், வெலிங்டன் கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு
கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட கல்வித்
துறையின் தடையில்லா சான்று உட்பட பள்ளி கட்டடம்
குறித்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
கன்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் துணைத் தலைவர்
பாரதியார், கலெக்டர் சங்கரிடம் வழங்கிய மனுவில்
கூறியுள்ளதாவது: சின்ன வண்டிச்சோலை
கன்டோன்மென்ட் பள்ளியில், தரமான இலவச கல்வி
வழங்கப்படுவதால், மாணவர் எண்ணிக்கை
ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது. 100 ஆண்டு
பழமை வாய்ந்த இப்பள்ளியை உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளியாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
சி.பி.எஸ்.சி.,யின் அங்கீகாரம் பெற, மாவட்ட கல்வித்
துறையின் தடையில்லா சான்று அவசியமாகிறது; அதை
வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு பாரதியார்
கூறியுள்ளார்.