சென்னை: தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய படிப்புளுக்கு, 390 இடங்கள் உள்ளன. மேலும், 23 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீடுக்கு, 1,423 இடங்கள் உள்ளன.இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
இந்த படிப்புகளில் சேர, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதில், 3,566 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றனர்
இந்நிலையில், 2018 - 19க்கான மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், அரசு சித்தா கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இதில், 57 இடங்களுக்கு, 97 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில், 23 பேர் இடங்கள் பெற்றனர். மீதமுள்ள, 34 இடங்கள் பொது பிரிவில் சேர்க்கப்பட்டன.சிறப்பு பிரிவில் இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் செந்தில்ராஜ் வழங்கினார். பிற்பகலில், பொதுப்பினருக்கான கவுன்சிலிங் நடந்தது. இந்த கவுன்சிலிங்கில், 704 மாணவர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலிங், 23ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.