தமிழ் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணதாசனின் இயற்பெயர் கல்யாணசுந்தரம். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதிவருகிறார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரின் தந்தை மூத்த இலக்கியவாதியான தி.க.சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் வண்ணதாசனுக்கு முக்கிய இடம் உண்டு.
வாழ்க்கையின் நுணுக்கமான அம்சங்களைக் காட்சிகளாகத் தன் எழுத்தில் சித்தரிப்பதற்குப் பேர் போனவர்.
இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
கலைமாமணி விருது பெற்றவர்.
நாவல், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், கடிதங்கள் உள்ளிட்ட பல தளங்களில் இயங்கிவருகிறார்.
எழுத்தாளர் வண்ணதாசன் 1962-ம் ஆண்டில் இருந்து இன்று வரை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரின் பல சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.