Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, December 22, 2016

பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் அரசுப் பள்ளி ஈடுபட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு தொடக்கப் பள்ளி இயங்குகிறது. 127 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக மு.விஜயலட்சுமி, உதவி ஆசிரியர்களாக டி.அசோக்குமார், ஜே.விஜயமல்ராஜ், சி.மணிகண்டன், க.நவனிகலா ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளியில் படித்த பலர், தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதியைச் சுற்றிலும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், இயல்பாகவே அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தருவதோடு, தமிழர்களின் பண்டைய கலாச்சாரம், விளையாட்டு, இன்றைய நவீன கால வளர்ச்சிகள் குறித்து கற்றுத்தரும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர் பாரம்பரிய விளையாட்டு கள், விளையாடுவோரின் சிந்திக்கும் ஆற்றலையும், அறிவாற்றலையும் உயர்த்தக் கூடியது.
ஆனால், நவீன விளையாட்டுகளின் வரவால், அவை அழியத் தொடங்கின. இவற்றை மீட்டெடுத்து, அதன் சிறப்பை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புரியவைத்துள்ளனர்.
இதன் விளைவு, மறைந்துவிட்ட அல்லது மறக்கப்பட்ட விளையாட்டுகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட 22 பாரம்பரிய விளையாட்டுகளில், இப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “முன்னர், வெளியில் விளையாடச் சென்ற சிறுவர்களை பெற்றோர்கள் வீட்டுக்குள் வா எனக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வர். ஆனால், இன்று வீட்டுக்குள் இருந்து சிறுவர்களை வெளியே வா என்று அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னர், சிறுவர்கள் சைக்கிள் டயரை ஓட்டி ஒரு கி.மீ. தொலைவை சாதாரணமாக கடந்து, ஓடி வருவர்; அலுப்பும் தெரியாது; உடலும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால், இன்று 100 அடி தொலைவைக் கூட ஓடி திரும்ப மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
ஆரோக்கியம், அறிவாற்றல் நிறைந்தது பாரம்பரிய விளையாட்டுகள். பல்லாங்குழி, கணக்கு கூட்டல், கழித்தல் ஆகியவற்றை எளிதாக புரிய வைக்கும். குண்டு விளையாட்டு, கையளவு (சான்), முழங்கை அளவு ஆகிய குறியீடுகளை உற்று நோக்குதல், குறிவைத்தல் மூலமாக கண்களுக்கு பயிற்சியும் கிடைத்தது.
நூத்துக்குச்சி, ஆடுபுலி ஆட்டம் மனதை ஒருநிலைப்படுத்த உதவியது. இவற்றை இன்றைய மாணவர்களுக்கும் கொண்டு செல்லவே முயற்சி எடுக்கப்பட்டது.
தற்போது பம்பரம், நாடு பிடித்தல், தாயக்கரம், நொண்டி, பச்சக்குதிரை, கோலிக்குண்டு, பல்லாங்குழி, டயர் வண்டி என 22 விளையாட்டுகளை மாணவர்கள் கற்று, அதனை தினமும் விளையாடி வருகின்றனர். இதன்மூலமாக, படிப்பிலும் அவர்களது கவனம் அதிகரித்துள்ளது.
மாணவர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் பொதுமக்கள் பலரும், அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதாக உறுதி அளித்துச் சென்றுள்ளனர். இதுவே, எங்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறோம்” என்றனர்.