பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. இதற்கு மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. தனி நபர்கள் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
அதாவது வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் தொடர்பான பழைய கட்டுப்பாட்டின்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். வருமான வரித்துறை சோதனையின்போது அவை பறிமுதல் செய்யப்படமாட்டாது. ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது
அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது. அதே போல, பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். சரியான விளக்கம் அளிக்கப்பட்டு வரி கட்டப்பட்டிருந்தால் எந்த வரியும் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.