Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, July 11, 2015

கரூர் மாவட்ட அரசுப்பள்ளிகளின் தரம் குறித்துமத்திய மனித வள பார்வையாளர் திடீர் ஆய்வு


கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சுகாதாரம் மற்றும் தரம் குறித்து, மத்திய மனித வள பார்வையாளர் ராஜேஷ், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தான்தோன்றிமலை, கடவூர், தோகைமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி, க.பரமத்தி, வாங்கல் ஆகிய எட்டு வட்டாரங்கள் உள்ளன. எட்டு வட்டாரங்களிலும் உள்ள அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் சுகாதாரம் மற்றும் உணவின் தரம் குறித்து, மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் பார்வையாளர் ராஜேஷ், கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார்.
க.பரமத்தி வட்டாரத்தில், புன்னம்சத்திரம் பழமாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், பள்ளியில் உள்ள கழிப்பறை சுத்தமாக உள்ளதா, கழிப்பறையை மாணவர்கள் பயன் படுத்துகின்றனரா என்பது குறித்தும், சத்துணவு சாப்பிடும் முன்பாக மாணவர்கள் சோப்பு போட்டு கை கழுவிய பிறகு உணவு உட்கொள்கின்றனரா, என்பதை பார்வையிட்டார்.
நேற்றை தினம் மதியம் உணவாக அரிசி சாதம், உருளை கிழங்கு பொறியல், சாம்பார் வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களுடன், மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் பார்வையாளர் ராஜேஷ் அமர்ந்து, உணவு சாப்பிட்டார். தொடர்ந்து, பள்ளி அருகிலுள்ள கிராம மக்களிடம், பள்ளி சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வு பிறகு பார்வையாளர் ராஜேஷ், கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் உள்ள, 15 பள்ளிகளில், பள்ளியின் சுகாதாரம் மற்றும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடவூர் வட்டாரத்தை காட்டிலும், க.பரமத்தி வட்டாரம் நன்றாக உள்ளது. இது குறித்து அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின்போது கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, எஸ்.எஸ்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் பொன்னம்மாள், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.