துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் 74 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக நவம்பர் 8-ம் தேதி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய 4 விதமான பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.
குரூப்-1 தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எல். பட்டதாரிகளாக இருந்தால் வயது வரம்பில் ஓராண்டு தளர்வு அளிக்கப்படும்.
பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களும் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் மெயின் தேர்வுக்கு முன்பாக பட்டப் படிப்பை முடித்துவிட வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.