Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 03, 2015

குழந்தைகளுக்கு பாக்கெட் தீனி கொடுக்காதீங்க! பெற்றோருக்கு டாக்டர் எச்சரிக்கை

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தரப்படும் மதிய உணவு மற்றும் பாக்கெட் தீனி குறித்து, பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகங்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், குழந்தைகளுக்கு மதிய உணவு தரப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு, வீட்டில் இருந்தே மதிய உணவும், இடைவேளையின்போது சாப்பிடுவதற்கு நொறுக்கு தீனியும், கொடுத்து அனுப்பப்படுகிறது. எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மதிய உணவாக, பெரும்பாலும் நூடூல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும், மினுமினுப்பான காகிதங்களில் காற்றுடன் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளையும், பல பெற்றோர் கொடுத்து அனுப்புகின்றனர்.

வளரும் குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான உணவு மிக அவசியம். வேலைக்கு செல்லும் பெற்றோர், சில நிமிடங்களில் தயாராகி விடும் துரித உணவை சமைத்துக் கொடுக்கவே, ஆர்வம் காட்டுகின்றனர். சுவை காரணமாக, குழந்தைகளும் அவற்றையே விரும்பி உண்கின்றனர். ஆனால், உடல் நலனுக்கு எதிரான, ஆரோக்கியத்தை கெடுக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்கப்பட்ட இந்த துரித உணவு மற்றும் சிநாக்ஸ் வகைகள், குழந்தைகளின் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கிறது. வயிற்றில் உபாதை ஏற்படுத்துகிறது; ஜீரண உறுப்புகளின் செயல் பாட்டை தடுக்கிறது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் துரித உணவு, தின்பண்டங்களை கொடுத்து அனுப்பக்கூடாது; பழங்கள், காய்கறி உணவு, சிறுதானிய உணவு வகைகளை மட்டுமே கொடுத்து அனுப்ப வேண்டுமென, சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கூறுகின்றனர். விழிப்புணர்வுள்ள சிலர் தவிர, பெரும்பாலான பெற்றோர், இதை அலட்சியம் செய்கின்றனர். சில சமயங்களில், ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை.

கோடை விடுமுறைக்குபின், தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு தர வேண்டிய உணவு, தவிர்க்க வேண்டிய உணவு குறித்து, பெற்றோர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, பள்ளி வளாகங்களில் பெற்றோர் பார்வையில் படும்படி, தவிர்க்க வேண்டிய உணவு, அதன் பாதிப்பு குறித்து, அறிவிப்பு பலகை வைக்க, பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும்.

குழந்தைகள் நல டாக்டர் பிரியாவிடம் கேட்டபோது, ""வளரும் குழந்தை களின் ஆரோக்கியத்துக்கு புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து மிக முக்கியம். தினசரி உணவில் பருப்பு, தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். மூன்று நேரமும் அரிசி சாதம் தருவதை, தவிர்க்க வேண்டும். செயற்கையாக நிறம், சுவை, மணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை, குழந்தைகளுக்கு தரக்கூடாது. காய்ச்சிய குடிநீர் தருவதால், நோய்களை தவிர்க்கலாம். குழந்தைகளின் உணவில், கட்டாயம் தயிர் சேர்க்க வேண்டும். பழங்களை கடித்து உண்ணச் செய்வது, மிக ஆரோக்கியமானது,'' என்றார்.