தூத்துக்குடி மாவட்டத்தில் இப்போதும் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக தகவல். மீட்கப்பட்டு சிறப்பு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தெரிவித்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கலெக்டர் ரவிக்குமார் கலந்து கொண்டார். இதில் குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் ஆதிநாராயணன், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் முருகேசன், தொழிலாளர் ஆய்வாளர் முகமது அப்துல் காதர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பரமசிவன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 12 குழந்தைகள் சிறப்பு பயிற்சி மையத்தில் 214 மாணவர்களும்,165 மாணவிகளும் படித்து வருகின்றனர். 2015 ல் 154 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு 85 பேர் சிறப்பு பயிற்சி மையத்திலும், 69 பேர் முறையான பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் கலெக்டர் ரவிக்குமார் கலந்துரையாடினார். வெற்றி வேல், இனிகோ நகர்: நான் எனது தந்தையுடன் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சென்று வந்தேன். என்னை மீட்டு படிக்க வைத்துள்ளனர். நான் பிளஸ் 2 முடித்துள்ளேன். சமையல் கலை படிப்புக்காக விண்ணப்பித்துள்ளேன், என்றார். இது போல் பலர் செங்கல் காளவாசலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் பலர் பட்டப்படிப்பும், ஸ்டாப் நர்ஸ், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தனர். விளாத்திகுள் பகுதியை சேர்ந்த மாணவி கூறியதாவது: நான் வேலைக்கு சென்று வந்தேன். என்னை மீட்டு படிக்க வைத்துள்ளனர். தற்போது எங்கள் கிராமத்தில் 10 க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்களிடம் படிக்க சொல்லி வலியுறுத்தினேன். அவர்கள் அதனை கேட்பதாக இல்லை, என தெரிவித்தார். அதிகாரிகள் பெயரளவுக்கு கண்துடைப்பாகவே நடவடிக்கை எடுக்கின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க முடிவதில்லை. இது போன்ற தகவல்கள் கிடைத்த பின்பாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?