Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, June 10, 2015

கல்லூரி முதல்வராக திருநங்கை மனாபி பானர்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார்


மேற்கு வங்க மாநில, நாடியா மாவட்டத்தில் உள்ள கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக திருநங்கை மனாபி பானர்ஜி செவ்வாயன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக பணியாற்றி வந்த மனாபி பானர்ஜி இன்று கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டது பெரும் பாராட்டுகளைக் குவித்துள்ளது.

செவ்வாயன்று பொறுப்பேற்ற மனாபி பானர்ஜியை மாணவர்களும் ஆசிரியர்களும் சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளுடன் வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மனாபி பானர்ஜி கூறும்போது, “கல்லூரி சர்வீஸ் கமிஷன் நடத்திய நேர்காணலில் தேர்ச்சி பெற்று நான் எனது திறமையினால் இந்த நிலையை எட்டியுள்ளேன். இந்த நியமனம் நான் ஆணா, பெண்ணா, அல்லது 3-ம் பாலினமா என்பது பற்றியது அல்ல” என்று கூறினார்.

தன்னுடைய வாழ்க்கையில் பாலின அடையாளம் எப்போதும் தடையாகவோ அல்லது மாறாக சாதகமாகவோ இருந்தது இல்லை. தன்னைப் போன்ற பலரும் இப்படி முன்னேற முடியும், வாய்ப்பிருக்கிறது என்று கூறினார் மனாபி பானர்ஜி. 

துணைவேந்தர் ரத்தன்லால் ஹாங்லூ, மனாபி பானர்ஜியை வரவேற்று கூறும்போது, “அவர் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் இவரது நியமனம் பெரிய உத்வேகத்தை அளிக்கும், சட்டத்துக்கு முன் பாலின வேறுபாடின்றி அனைவரும் சமம் என்பதை இவரது நியமனம் நிறுவியுள்ளது” என்றார்.

மேலும் மனாபியின் கற்றுக் கொடுக்கும் திறமைகளை பாராட்டிய ஹாங்லூ, இவர் மிகச்சிறந்த நிர்வாகி, எனவே முதல்வர் பொறுப்புக்கு மிகவும் தகுதிபடைத்தவர் என்றார். 

நைஹதியில் மரபான வங்காள நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனோபி பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இவருக்கு வளர்ப்பு மகன் ஒருவரும் உண்டு. அவரது பெயர் திபாஷிஷ்.