கடந்த 3 ஆண்டுகளாக பல்கலைக் கழகம், கல்லூரிகளில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு தாமதமாவதால் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 45 மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், 318 மாநில அரசு பல்கலைக்கழகங்கள், 37,204 அரசு கல்லூரிகள் உள்ளன. இந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு நிதி ஒதுக்குகிறது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவன ஆராய்ச்சிகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிகள், நாட்டின் முன்னேற்றத்துக்கும், மாணவர் கள் முனைவர் பட்டம் பெறுவதற் கும், அவர்களுடைய ஆராய்ச்சி திறமையை வெளிப்படுத்துவதற் கும் வாய்ப்பாக அமைகின்றன. இதற்காக பல்கலைக்கழக மானியக் குழு, ஆண்டுதோறும் ஆயிரம் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யும். குறைந்தபட்சம் ஒரு ஆராய்ச்சி திட்டத்துக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நிதி ஒதுக்கி வந்தது.
இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி திட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. பலருக்கு ஆராய்ச்சிக்கான நிதியை அனுப்புவதில்லை. அதனால், இந்த திட்டங்களை உருவாக்கிய ஆய்வு மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பைத் தொடர முடியாமல் பாதி யில் நிறுத்தும் நிலை தொடர்கிறது.