ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாயகம் திரும்பியவரை மக்கள் பெருமையாக பார்க்கின்றனர்.
விராத் ஷா (45) என்பவர், துபாயில், ரூ.3.5 லட்சம் சம்பளத்துடன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் விராத் ஷா. இவர் 200க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருகிறார். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாவலரராகவும் செயல்படுகிறார்.
இது தொடர்பாக விராத் ஷா கூறுகையில், எனது சிறிய வயதில், மில் தொழிலாளியாக இருந்த எனது தந்தை, வீட்டிற்கு வருபவர்களை வெறும் கையுடன் அனுப்ப மாட்டார். எனது தந்தை காலமான பிறகு நிலைமை மாறியது. பள்ளிப்படிப்பு முடிந்த பொறியியில் படிப்பு படித்த போது, எனது பணத்தேவைக்காக டியூசன் எடுத்தேன்.
அப்போது அவர்களிடம் பணம் வாங்குவது மனதுக்கு கடினமாக இருந்தது. பின்னர் இந்தியாவில் பல நிறுவனங்களில் பணிபுரிந்த நான் கெமிக்கல் இன்ஜீனியரிங் படித்த திருப்தியை மணந்து கொண்டேன். வெளிநாட்டில் 5 வருடங்கள் நல்ல சம்பளத்தில், நல்ல வேலையில் இருந்தேன். துபாயில் மாதம் ரூ.3.5 லட்சம் சம்பளம் கிடைத்தது.
2010ல் இந்தியா வந்த போது மீண்டும் வெளிநாடு செல்லக்கூடாது என முடிவு செய்தேன். ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என உறுதிபூண்டேன். எனது இரண்டு மகள்கள், மனைவிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளேன்.
இசான்பூர் பகுதியில் பள்ளி செல்லாத ஏழை குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து, குழந்தைகளை படிக்க அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். 2014ல் எனது பணி 10 குழந்தைகளுடன் துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. 2015ல் அவர்களை அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு அழைத்து சென்ற போது, பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியர் மறுத்தார். இதன் பிறகு அவர்களுக்கு நானே பாதுகாவலராக மாறினேன்.
தற்போது நான் நடைபாதை பள்ளிகள் துவங்கி 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருகிறேன். இதற்காக டிரஸ்ட் ஒன்று துவக்கியுள்ளேன். எனது நண்பர் ஒருவர் பள்ளிக்கு தேவையான வசதிகள், மருத்துவ உதவிகள் செய்கின்றனர். தனது நண்பர்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான உணவு வசதிகளையும் செய்து தருகிறார். தனது நடைபாதை பள்ளிக்கு நவீன வசதிகளுடன் புதிய பள்ளி கட்டி இலவச வசதி செய்து தருவதே எனது லட்சியம் எனக்கூறியுள்ளார்.