அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம்
அளித்த பிறகும், அவர்களின் சான்றிதழ் உண்மையானதா
என, கண்டுபிடிக்க முடியாமல் பள்ளிக்கல்வி துறை
திணறுகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
நிராகரிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், 2006க்கு பின், 10 ஆயிரம் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு, 10 ஆண்டுகளாக ஊதியம் வழங்கிய பிறகும்,
அவர்களின் சான்றிதழ் உண்மையானதா என, பள்ளிக் கல்வி
துறை மற்றும் தேர்வுத்துறையால் கண்டுபிடிக்க
முடியவில்லை.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த கல்வி
ஆண்டில், உயர்நிலை தலைமை ஆசிரியர் மற்றும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க,
பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு தகுதியான ஆசிரியர்கள், தங்கள் பெயர்
விவரங்களுடன், சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த
சான்று, இரண்டு ஆண்டு பயிற்சி முடித்தது தொடர்பான,
தகுதி காண் பருவ சான்றிதழ் போன்றவற்றை அளிக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆசிரியர்கள் கடும்
அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், பெரும்பாலான
ஆசிரியர்களுக்கு, இன்னும் சான்றிதழின் உண்மை தன்மை
கண்டறியப்படவில்லை. அத்துடன், ஆசிரியர்கள் தகுதி
காண் பருவம் முடிந்து, எட்டு ஆண்டு ஆன பிறகும்,
பயிற்சி முடித்த சான்றிதழும் கிடைக்கவில்லை.