பேராசிரியர் கோகிலா தங்கச்சாமி ‘மூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி என்ன?' எனக் கூறிய ஆலோசனைகளைப் படித்தேன்.
கிராமப்புற அரசுப் பள்ளிகள் என்றால், அது ஓராசிரியர் அல்லது ஈராசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் பிள்ளைகள் படித்தால் திறன்மிக்கவர்களாக வளர மாட்டார்கள் எனத் தவறாகப் பரப்பப்படும் வதந்திகளே அரசுப் பள்ளிகள் மூடப்படக் காரணம்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, மற்ற பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கச் சொன்னால் யாரும் சேர்க்க மாட்டார்கள் என்பது உண்மையே.
பல அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளின் சாதனையை முறியடிக்கிறது என்றால் அதற்குக் காரணம், பெற்றோர்கள் தங்கள் பங்களிப்பையும் ஈடுபாட்டையும் உறுதிசெய்வதற்காகவே பெற்றோர்-ஆசிரியர் கழகம், கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு, அன்னையர் குழு எனப் பல குழுக்கள் உள்ளன.
இவர்கள் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்தாலே அரசுப் பள்ளிகள் அசுர வளர்ச்சி அடையும். இவை எல்லாவற்றையும் விட அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை என்ற பேராசிரியரின் ஆலோசனையை, அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று கூடுதலாக அறிவிப்பு வெளியிடப்படுமானால் அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த நாளே மாணவர்களால் நிரம்பிவிடும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.