தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28)
கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5
மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி
இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம்
தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்,
பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில்
உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு
பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன
.
நாளை கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே
28-ஆம் தேதி கடைசி நாளாகும். சுகாதாரத் துறையின் இணையதளமான
www.tnhealth.org -இல் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து
விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் அனுப்பிய விண்ணப்பம் சென்று
சேர்ந்ததா என்பதை உறுதி கொள்வதற்கான இணைப்பு (link) சுகாதாரத் துறையின்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மொத்தம் 590
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம்
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 17,843
விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர்ந்துள்ளன
என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.