Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, May 04, 2015

தப்பித்த குரங்குகள்! - ச.மாடசாமி


தப்பித்தது எதுவோ, அதுவே உன் ஜீவன் மிக்க சாராம்சம் என்று
சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. நாங்கள் கல்வி உரையாடலில், வேடிக்கையாக
இதைத் ‘தப்பித்த குரங்குகள்’ என்று குறிப்பிடுவோம். யார் கைகளும் படாமல்,
யார் கைகளிலும் சிக்காமல் தப்பித்தவைதான் அசல்; வடிவமைக்கப்பட்டதெல்லாம்
நகல்தான்! பள்ளிக்கூடம் - உலகின் மிகப்பெரிய நிறுவனம் - தப்பிப்பது
சுலபமா? அசல் முகத்தைத் திட்டமிட்டுக் கரைக்கிற இடம்!இப்போது என் பள்ளிப்
பருவம் ஞாபகத்துக்கு வருகிறது.1950-களின் இறுதியில் பெரியகுளம்
வி.எம்.போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.வராகநதி ஆற்றங்கரையில்
இருந்த பள்ளி. எந்தக் காலத்திலும் வராக நதியில் கொஞ்சமாவது தண்ணீர்
ஓடும். வகுப்பறை ஓய்ந்த நேரங்களில் வராகநதி ஆறும் ஆற்றங்கரையும்தான்
எங்கள் கல்விக்கூடம்.ஆசிரியர்கள் பல மாதிரிகளில் இருந்தார்கள். ஆழ்ந்த
புலமையால் எங்களை விட்டுச் சற்றுத் தள்ளி நின்ற சர்மா, சிவக்கொழுந்து;
‘அட போடா!’ என்று சொல்லி எங்களோடு எப்போதும் கலந்துநின்ற பாண்டியராஜன்;
பரம சாதுவான ஓவிய ஆசிரியர், குமுறும் வார்த்தைகளில் எங்களுக்கு அரசியல்
கற்றுத்தந்த கைத்தொழில் ஆசிரியர் - எனப் பலர். ஆசிரியர் பலவிதமாக
இருந்தபோதும் எவரும் எந்த நிர்ப்பந்தத்தையும் அழுத்தத்தையும் எங்கள்மீது
ஏற்றியதில்லை. மாணவர்களுக்குள் சாதிமத பேதங்கள் இருந்ததும் இல்லை. கவிஞர்
மு.மேத்தா அன்று எங்கள் பிரியத்துக்குரிய மாணவர் தலைவர்.
எதிர்காலம்குறித்த கனத்த சிந்தனைகளும் அன்று கிடையாது.
எஸ்.எஸ்.எல்.சி-யில் எங்களில் பலர் 500-க்கு 240 மதிப்பெண் வாங்கி
‘பார்டர் பாஸ்’ பண்ணுவோம். அதற்கே, “மாப்ள, புரோட்டா வாங்கிக் கொடுய்யா!”
என்று மச்சான்மார்கள் ட்ரீட் கேட்பார்கள்.என் சொந்த முகம் எங்கே?பள்ளியை
விட்டு வெளியேறும்போது வடிவமைக்கப்படாத சொந்த முகங்களோடு வெளியேறினோம்.
அதற்கான சுதந்திர வெளி எங்கள் பள்ளியில் இருந்தது. அந்தச் சுதந்திரவெளி
முக்கியமானது. வர்த்தகமும், நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர வெளி.
ஆளுமைகளைச் சிதைக்காத சுதந்திர வெளி. எந்த நேரமும் வெற்றியை
நோக்கித்துரத்தி அடிக்காத பொதுவெளி!இப்போது அது எங்கே? ஆசிரியர் தட்டி
உருட்டிக் காயப்போட்ட முகம், மத்திய வர்க்க ஆணாதிக்கப் பாடத் திட்டம்
வழங்கிய முகம், வேலைவாய்ப்புகள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் விரும்பிய
முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. என் சொந்த முகம் எங்கே? எங்கே
எனக்கான சுதந்திர வெளி? கல்வி உரிமைச் சட்டம் போன்றவை ‘அதட்டல்
அதிகாரங்கள்’ மீது கேள்வி எழுப்பலாம். ஆனால், அக்கறை என்ற பெயரில் உலவும்
‘நுட்பமான அதிகாரங்கள்’ எப்போதும் நிலைத்திருக்கின்றன. வடிவமைத்தல்,
மதிப்பிடுதல், வடிகட்டுதல் எனப் பல வடிவங்களில் இருக்கின்றன நுட்பமான
அதிகாரங்கள்.எட்டாம் வகுப்பு வரை தேர்வு வைத்து வடிகட்ட முடியாமல்
போகலாம். ஆர்வத்துடன் மேடையேற வந்த முகங்களில் ‘எண்ணெய் வடியும் கறுப்பு
மூஞ்சிகளை’ வடிகட்டித் துரத்து வதில் யார் குறுக்கிட முடியும்?
வடிகட்டும் வேலையைச் செய்வோர் பலர் கறுப்பர்களாக இருப்பதும் ஒரு
முரண்!வெட்டிச் சாய்க்கும் வடிவமைப்புமதிப்பிடுவதும் அதிகாரம்தான்!
விடையில் எப்போதும் நாங்கள் தேடுகிற சில வார்த்தைகள் தென்பட வேண்டும்.
முழு விடையையும் வாசிக்க நேரம் கிடையாது. நீ எப்படி யோசித்து விடை
எழுதினாலும் ‘நாலு வரிக்கு ரெண்டு மார்க்’ என்று நான் முடிவு
செய்துவிட்டால் ரெண்டு மார்க்தான். மாவட்டப் பேச்சுப் போட்டிக்குத் தயார்
செய்யும்போது இயல்பாகப் பேசுகிறவனை ‘அப்படியில்ல! ஏத்த எறக்கத்தோடு
பேசு!’ என்று வெட்டிச் சாய்ப்போம். அதுதான் வடிவமைத்தல்!விளம்பரங்களை
நம்பும் மூளைஎதுவும் இயல்பாக இருப்பதோ, விதவிதமாக இருப்பதோ வடிவமைக்கும்
எங்கள் அதிகாரத்துக்கு எதிரானது.சிந்திக்க அனுமதிப்பதுகூட வடிவமைக்கும்
அதிகாரத்துக்கு எதிரானதுதான். எனவேதான், கிளப்,கேம்ப், ஒர்க்‌ஷாப் என்று
பிஸியாக இருக்கவும், படிப்பது என்ற பெயரில் திரும்பத் திரும்ப டிரில்
பண்ணவும் பிள்ளைகளைப் பழக்கியாயிற்று. ‘பிஸி’யான பிள்ளை எதைச்
சிந்தித்தது? படித்த மனிதர்கள் மத்தியில்தான் பகை வளர்க்கும் மதவாதம்
நிரம்பிக் கிடக்கிறது. அவர்கள் மத்தியில்தான் உளுத்துப்போன வைதிகச்
சடங்குகள் புதுப்புது ரூபம் எடுக்கின்றன. அப்படியானால், ‘படிப்பும்
பள்ளிக்கூடமும்’ கற்றுத் தந்தது என்ன? வடிவமைத்தது எதை? விளம்பரங்களை
நம்பும் மூளைகளைத்தானே அவை வடிவமைத்திருக்கின்றன. எங்கே பிள்ளைகளுக்கான
சுதந்திர வெளி?வகுப்பறை தாண்டிய வாசிப்புஇன்றைக்கும் கொஞ்சம்
சுதந்திரவெளி மிச்சம் இருக்கும் இடம் அரசுப் பள்ளிகள்தான். அதனால்தான்
அரசுப் பள்ளி களுக்காக வாதாடுகிறோம். அரசுப் பள்ளிகளுக்காக
வாதாடுவதுகுழந்தைகளின் சுதந்திரத்துக்காக வாதாடுவதாகும். அவர்களின்
ஆளுமைக்காக வாதாடுவதாகும். பல ஆண்டு களாக ஆசிரியர், மாணவரைச் சந்தித்து
வருவதன் அடிப் படையில் சில உண்மைகளை இங்கு என்னால் நம்பிக்கை யுடன் பகிர
முடியும். ஒப்பிட்டுச் சொல்வதானால், அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம்தான்
வகுப்பறை தாண்டிய வாசிப்பு கூடுதலாக இருக்கிறது.மனந்திறந்த உரையாடலும்
அவர்கள் மத்தியில் சாத்தியமாக இருக்கிறது. விவாதத்தின்போது அவர்கள்
வாயொடுங்கி நின்று நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளி மாணவர்போல
வெடிப்புறப் பேசக்கூடிய, விவாதிக்கக்கூடிய மாணவர்களை வேறு பள்ளிகளில்
காண்பது அரிது. பாட்டு, நாடகம் என்றாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தூள்
கிளப்புவார்கள். தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்கப்படாத திறமைகள்.
கூண்டுக்குள் சிக்காத குரங்குகள்... இந்தச் சுதந்திர வெளி, கவனிப்பும்
பராமரிப்புமற்ற பாழ்வெளியாக மாறிவருவதுதான் நம் கவலை. ஆசிரியர்கள்
மட்டுமே இதை ஓரளவு சரிசெய்ய முடியும். எனவேதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களை
நோக்கி அடிக்கடி பேசுகிறோம்.நேசத்தின் வழி நெருங்குவோம்எதையும் ஒரு
நிர்ப்பந்தத்தோடு பேசியே நமக்குப்பழக்கம். அரசுப் பள்ளி ஆசிரியர்களை
நோக்கிப் பேசுவது ஒருபுறம் நியாயத்தின் குரலாக இருந்தாலும் மறுபுறம்
அதிகாரத்தின் குரலாகவும் இருக்கிறது. தேவையில்லை. அதிகார வழியிலான
நிர்ப்பந்தத்தின் மூலம் அல்ல - நேசத்தின் வழி ஆசிரியர்களை நெருங்குவோம்.
மாற்றம் நிச்சயம் சாத்தியமாகும்!ச. மாடசாமி, கல்வியாளர்,தொடர்புக்கு:
smadasamy1947@gmail.com SOURCE: THE HINDU