தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து , தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், ’குரூப் - 1’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின், ’குரூப் - 1’ பதவிகளான, துணை ஆட்சியர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., போன்ற பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 19ல், தேர்வு நடக்கிறது.
இதற்கு, நவ., 9ல், விண்ணப்ப பதிவு துவங்கியது; டிச., 8ல், விண்ணப்ப பதிவு முடிகிறது. டிச., 10க்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து, தமிழகம் முழுவதும், இரண்டு நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில், மூன்று நாட்களாக இணையதளங்கள் மற்றும் இணையதள மையங்கள் சரிவர செயல்படாமல், பலர் விண்ணப்பிக்க முடியவில்லை. இன்றும் வணிக நிறுவனங்கள், இணையதள மையங்கள் திறக்கப்படுமா என, சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, தற்போதைய சூழலை கருதி, ’குரூப் - 1’ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.