்சமச்சீர் கல்வியின் தரம் உயர்த்தப்படாததால், மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்
திட்டத்துக்கு மாறும் பள்ளிகளின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளது. இதில், என்.ஓ.சி., எனப்படும்
தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் விதிமீறல்
நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், 4,000
மெட்ரிக் பள்ளிகள்; 6,000 தனியார் நர்சரி பள்ளிகள் உட்பட,
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்
பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும்
ஓரியண்டல் என, மூன்று வித பாடத்திட்டங்கள் அமலில்
இருந்தன. ஆனால், 2011 முதல், அனைத்து
பள்ளிகளிலும், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு
உள்ளது.
ஆனால், சமச்சீர் கல்வியின் தரம் குறைந்துள்ளதால்,
நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாடத்திட்டம்
இருக்கும் வகையில், சி.பி.எஸ்.இ., தரத்தில் பாடங்கள்
கற்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் சங்க
நிர்வாகிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர் இதற்கு
அரசு செவி சாய்க்காததால், பல தனியார் பள்ளிகள்,
சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலை சான்றிதழ்
கல்வி முறையான, ஐ.சி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.
தமிழகத்தில், வேறு பாடத்திட்டத்துக்கு மாற வேண்டும்
என்றால், மெட்ரிக் இயக்குனரகத்திலும்; பள்ளிக் கல்வித்
துறையிலும், என்.ஓ.சி., எனப்படும், தடையில்லா
சான்று வாங்க வேண்டும்; அங்கீகாரம் பெற, பள்ளிக்
கல்வித் துறையில் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்த என்.ஓ.சி., இருந்தால் தான், சி.பி.எஸ்.இ.,யில் பாடத்
திட்ட இணைப்பு அனுமதி கிடைக்கும். இந்த
நடைமுறை, தனியார்பள்ளிகளுக்கு பெரும் சிக்கலை
ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அனைத்து
மாவட்டங்களிலும், என்.ஓ.சி., விண்ணப்பங்களை,
நேரடியாக பள்ளிக் கல்வி இயக்குனரக அதிகாரிகளே
ஆய்வு செய்வர்.ஆனால், கடந்த, ஐந்து ஆண்டுகளாக
இந்த விண்ணப்பங்களை, நேரடியாக தலைமைச்
செயலகத்தில் உள்ள
பள்ளிக் கல்வித் துறை செயலர் அலுவலகத்துக்கு
மட்டுமே அனுப்ப வேண்டும் என, சி.இ.ஓ.,க்கள்
நிர்ப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். விண்ணப்பங்களை
செயலக அதிகாரிகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டு,
பள்ளி உரிமையாளர்களை நேரில் வரவழைத்து, பேரம்
பேசுவதாக புகார் எழுந்துள்ளது.இதில், பேரத்துக்கு
பணியாத பல பள்ளிகளின் கோப்புகள், செயலகத்திலேயே
மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அரசின்
கொள்கை குறிப்புகளை தயாரிக்க வேண்டிய செயலகம்,
இப்படி குறுக்கு வழியில் ஆதாயம் தேடுவதா என,
தனியார் பள்ளிநிர்வாகிகள் தவிப்பில் உள்ளனர்.