ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம் எடுக்கும் மையத்தில்,
மின் கட்டணம் செலுத்தும் சேவையை துவக்க, தமிழ்நாடு
மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாடு
கணக்கு எடுத்ததில் இருந்து, 20 நாட்களுக்குள்,
கட்டணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு
செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு
வழங்கப்படும். மாதந்தோறும், மின் கட்டணம் வாயிலாக,
2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
மின் கட்டண மையங்களில், கூட்டம் நிரம்பி வழிவதால்,
பலர் பணத்தை தொலைத்து விடுகின்றனர். இதையடுத்து,
'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு', இணைய தளம், அஞ்சல்
நிலையம், அரசு சேவை மையங்களில், மின் கட்டணம்
செலுத்தும் வசதியை, மின் வாரியம் துவக்கியது. அந்த
வரிசையில், தற்போது, ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணம்
எடுக்கும் மையத்தில், மின் கட்டணம் செலுத்தும்
சேவையை அறிமுகம் செய்ய, மின் வாரியம் முடிவு
செய்துள்ளது.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:ஏ.டி.எம்., மூலம், மின் கட்டணம்
செலுத்தும் சேவையை துவக்க, அரசு வங்கிகள், தனியார்
வங்கிகளுடன் பேச்சு நடத்தப்படும்.
சோதனை முறையில், ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.,
மையத்தில், மின் கட்டணம் செலுத்தும் வசதி
துவங்கப்பட்டு உள்ளது. விரைவில், 15 வங்கிகளின்
ஏ.டி.எம்.,களில், அந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.