போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் எண்ணம் உண்டாகும்போதே, போதைக்கு அடிமையாவது எவ்வளவு பெரிய துன்பம் என்பது பிடிபடுகிறது.
மது, போதை மருந்து, பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம், காரணமற்ற வெறுமை, தற்கொலை சிந்தனை, அதிகளவில் பயம் அல்லது கோபம் அல்லது சந்தேகம் போன்றவற்றால் அவதிப்படுவது என்று நம்மையும் அறியாமல் பலவாறு துன்பப்படுகிறோம். குறிப்பாக, பேஸ்புக் அல்லது வாட்ஸப்பில் மூழ்கியிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, அதுவும் ஒருவகை போதை என்று உணரவே நெடுநாளாகிறது. நேர விரயத்தை உண்டாக்குவதோடு, நமது மனநலத்தையும் இது புரட்டிப்போடுகிறது.
எல்லா இடத்திலும் குனிந்த தலை நிமிராத இளையதலைமுறையை பார்ப்பது அதிசயமாகிவிட்டது. அந்த அளவுக்கு வாட்ஸ்அப் பேஸ்புக்கும் நம் தலையைத் தாழ்த்திவிட்டது. இதனால் முதலில் நமது தூக்கம் பறிபோய், அதன்பின் உடல்நலம் கெட்டு, முடிவில் மனநலம் கேள்விக்குறியாகிறது. கண்களுக்குக் கீழே கருவளையம் இல்லாதவர்களைப் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு பேஸ்புக் – வாட்ஸ்அப் மோகம் நமது இயல்பை மாற்றி, மனநோயாளிகளாகத் திரிவதை நாகரிகம் என்றாக்கியிருக்கிறது.