கல்விக்குழு அமைப்பதாக கூறி தனியார் பள்ளிகளுக்கான
5 சதவீத பாடப் புத்தக தள்ளுபடியை வழங்காமல்
கூடுதலாக ஆயிரக்கணக்கில் கல்வித்துறை அதிகாரிகள்
வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தமிழ் பாடப் புத்தகம்
வாங்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால்
மற்றும்கல்வியியல் பணிகள் கழகத்தில், 5 சதவீத விலை
சலுகை உண்டு. தனியார் பள்ளிகள்
பாடப்புத்தகங்களுக்கான கட்டணத்தில் தமிழ்நாடு
பாடநுால் கழகத்தில் 95 சதவீதம் அளித்தால் மட்டும்
போதும். ஆனால் ஒவ்வொரு மெட்ரிக் ஆய்வாளர்
அலுவலகம் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி
அலுவலகங்கள் இணைந்து, தனியார் பள்ளிகளின் புத்தக
கொள்முதலை தங்கள் வசம் எடுத்துள்ளன.
இந்த அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு அதிகாரிகள்
100 சதவீத கட்டணத்தை பெற்று கொண்டு தமிழ்நாடு
பாடநுால் கழகத்தில் 95 சதவீதம் மட்டும் கட்டுவதாக
புகார் எழுந்துள்ளது. மீதமுள்ள 5 சதவீத பணத்தை
கொண்டு தங்கள் அலுவலகத்தில் உள்ள தற்காலிக
பணியாளர்களுக்கு ஊதியம் தருவதாக தனியார்
பள்ளிகளுக்கு கணக்கு காட்டுகின்றனர்.'இந்த
முறைகேட்டில்
ஈடுபடுவோர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்' என,
தனியார் பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ள
நிலையில், புதிய கட்டண வசூலில்
இறங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது
தொடர்பாக பல மாவட்டங்களில் மெட்ரிக் ஆய்வாளர்
அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு
கையெழுத்திடப்படாத அச்சடிக்கப்பட்ட கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பாடப் புத்தக
கொள்முதலில் கிடைக்கும் 5 சதவீத நிதியின் மூலம்
'ஸ்டெனோகிராபர்' மற்றும் டிரைவர்களுக்கு சம்பளம்
கொடுக்கவும், மற்ற செலவினங்களை சமாளிக்கவும்
முடியவில்லை. 'இயக்குனர், இணை இயக்குனர்
உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின்
செலவுகளுக்கும் பங்களிப்பு தர வேண்டியுள்ளது. இந்த
5 சதவீத நிதி மட்டுமின்றி, 'அகாடமிக் லீக்' என்ற
பெயரில் புதிய இயக்கம்துவங்கப்பட்டுள்ளது. அதன்
பெயரில் துவங்க உள்ள வங்கி கணக்கிலும் நிதி
பங்களிப்பு தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பல
மாவட்டங்களில், தனியார் பள்ளிகளில், இதுபோன்று நிதி
வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக, சில
தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
தாளாளர்களுக்கு வாய்மொழியாக பொறுப்பு
வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர்
கூறும்போது, 'அகாடமிக் கவுன்சில் அல்லது,
'அகாடமிக் லீக்' என்ற அமைப்பை, அரசால் சட்டப்படி
பதிவு செய்து துவங்க வேண்டும். ஆனால், நிதி
வசூலுக்காக இந்த அமைப்பை துவங்குவதும் அதற்கு
சட்ட அங்கீகாரம் இல்லாமல் இருப்பதும் தனியார்
பள்ளிகளை அச்சம் அடைய செய்துள்ளது. 'இதேபோன்ற
அமைப்புக்கு பணம் வழங்க வேண்டும் என்றால், அதை
ஈடுகட்ட மாணவர்களிடம் அதிகமாக வசூலிக்க
வேண்டும். எனவே, அதிக வசூலை தடுக்க வேண்டிய
அதிகாரிகளே விதிமீறலை ஊக்குவிப்பதாக இந்த
நடவடிக்கை அமைந்து உள்ளது' என்றனர்.