சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை
அதிரடியாக குறைத்து நிதியமைச்சகம் கடந்த மாதம்
அறிவித்தது. அப்போது சிறுசேமிப்புகளுக்கான வட்டி
விகிதத்தில் 0.25% குறைக்கப்படுவதாகவும், இந்த
வட்டிவிகிதம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான
காலாண்டு வட்டி விகிதத்தை இன்று மாற்றியமைத்துள்ள
மத்திய அரசு, புதிய வட்டி விகிதங்களை
அறிவித்துள்ளது. அதன்படி, பிபிஎப் திட்டத்துக்கு
வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து
8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல
கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7
சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால
வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களுக்கு
வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருநது 7.1
சதவீதமாகவும், 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.4
சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், மூன்றாண்டு
டெபாசிட்டுகளுக்கு 8.4 சதவீதத்திலிருந்து 7.4
சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.5
சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், 5 ஆண்டு
ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருந்து 7.4
சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம்
வழக்கமான சேமிப்புக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டி
விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு
பத்திரங்களுக்கு (என்எஸ்சி) வழங்கப்படும் வட்டி விகிதம்
8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளில் முதிர்வடையும்
சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்திலிருந்து
8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு
(சுகன்ய சம்ரிதி) வழங்கப்படும் வட்டி விகிதம் 9.2
சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக்
குறைக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1-
ம் தேதி முதல் அமலுக்கு வரும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.