கோல்கட்டா: பள்ளியில் சேர்ந்த நாள் முதல், பள்ளி இறுதி
ஆண்டு வரை, ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், 100
சதவீத வருகை தந்து சாதனை மாணவிக்கு பாராட்டுகள்
குவிகின்றன.
மேற்குவங்க மாநிலம், கோல்கட்டா நகரின் டம் டம்
பகுதியில் வசிக்கும், சித்தரஞ்சன் குஹா - டாலி
தம்பதியின் மகள் சந்திரஜா. அப்பகுதியில் உள்ள ஒரு
தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., வகுப்பில் சேர்ந்த
சந்திரஜா, தற்போது, பிளஸ் ௨ படித்து வருகிறார்.
படிப்பில் மட்டுமின்றி, வருகை பதிவிலும், ஏ கிரேடு
பெற்றுள்ளார்.
பள்ளியில் சேர்ந்த நாள் முதல், இன்று வரை, அவர்
ஒருநாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. 100 சதவீத
வருகை பதிவுடன் அவர் சாதனை படைத்துள்ளதை,
பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமின்றி,
அப்பகுதி மக்களும் பாராட்டி உள்ளனர். சந்திரஜாவை
பார்த்து, மற்ற மாணவர்களும் விடுப்பு எடுக்காமல்
பள்ளிக்கு வருவதாக, பள்ளி முதல்வர் கூறியுள்ளார்.
மாணவியின் சாதனை குறித்த தகவல், பத்திரிகைகளில்
வெளியானதை அடுத்து, மேற்குவங்க மாநில கல்வி
அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, சந்திரஜாவை தன் அமைச்சக
அலுவலகத்திற்கு வரவழைத்து, சான்றிதழ் மற்றும் பரிசு
வழங்கி பாராட்டினார். மேலும், சந்திரஜாவுக்கு
தேவையான உதவிகளை, அரசு செய்யும் என்றும்
உறுதியளித்தார்.