தமிழகத்தின் முன்னணி கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ச.மாடசாமி, தம் நெடுங்காலப் பணி அனுபவத்தின் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் வகுப்பறை சார்ந்து எழுதியுள்ள மிக சுவாரஸ்யமான கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும், கல்வியாளர்களின் படைப்புகள் என்றாலே கனத்த இருண்மை நிலவும். ஆனால், மெல்லிய நகைச்சுவையும், எளிய சொற்களுமாக ஆசிரியர்- மாணவர் உறவு சார்ந்த உளவியலை நுணுக்கமாக அலசுகிறது இந்த நூல். அறிவொளி இயக்கம், பாடத் திட்டக்குழு, பல்வேறு கல்வி ஆலோசனைக் குழுக்களை வழிநடத்தியுள்ள மாடசாமி, மாணவர்களை எதிர்கொள்வதில் ஆசிரியர்கள் செய்யும் தவறு
களையும் அத்துமீறல்களையும் மென்மையாக சுட்டிக்காட்டுகிறார். ‘ஒவ்வோர் அவமதிப்பும் ஒரு மரணம்’, ‘வகுப்பறை உறவு- நெருக்கமும் இடைவெளிகளும்’ போன்ற கட்டுரைகள் தற்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொடக்கப் பள்ளிகளில் கற்றல்- கற்பித்தல் சூழல் வெகுவாகச் சிதைந்து வரும் சூழலில், இதுமாதிரியான நூல்கள் வகுப்பறைகளுக்குள் வாசிக்கப்பட வேண்டும். விலை; ரூ.50, வெளியீடு; பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ட்ரன்) தொலைபேசி: 044-24332424
நன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி