சேலம்: விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை
அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு,
கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய
செய்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்துக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக,
மாவட்டங்களுக்கு, இரண்டு முதல், நான்கு மையம்
வரை அமைக்கப்பட்டுள்ளது.இதில், மதிப்பீட்டு பணியை
தாமதமின்றி முடிக்க, உதவி தேர்வு மதிப்பீட்டார்
பணிக்கு, சுயநிதி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில்,
பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும்
நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கான ஆணை
பெற்றும், பல முகாம்களில் பங்கேற்காமல், பல்வேறு
விளக்கங்களை அளித்து வருகின்றனர். இதற்கு தனியார்
பள்ளி நிர்வாகமும் ஒத்துழைப்பது கல்வித்துறை
அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர்
கூறியதாவது:பள்ளி மாணவர்களுக்கான பிளஸ் 2 தேர்வு
நடந்து வரும் நிலையில், பள்ளியில் உள்ள பணிகளை
கவனிக்கவே, ஆசிரியர்களை தனியார் நிர்வாகம்
வலியுறுத்துகிறது. மதிப்பீட்டு பணிக்கு வராமல்,
பல்வேறு காரணங்களை அடுக்குகின்றனர். நடவடிக்கை
எடுக்க, தனியார் பள்ளி நிர்வாகத்திடம் பரிந்துரை தான்
செய்ய முடியும் என்பதால், ஆசிரியர்களும், தங்களது
பள்ளி நிர்வாகம் கூறுவதையே கடைபிடிக்கின்றனர்.
இதனால், மாற்று ஏற்பாடுகளை செய்ய,
கல்வித்துறையினர் திணறிவருகின்றனர்.இவ்வாறு அவர்
கூறினார்.