Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, January 02, 2016

அனைத்து வீடுகளுக்கும் 3 ஆண்டுக்குள் சமையல் காஸ் இணைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு (எல்பிசி) இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமையல் காஸ் பயன்படுத்தும்போது நேரிடும் அசம்பாவிதங்களை தடுக்க அவசர உதவி பெறுவதற்கான 1906 தொலைபேசி எண் சேவை தொடக்கவிழா டெல்லியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

2016-ம் ஆண்டு எல்பிஜி நுகர்வோர் ஆண்டாக கடைப்பிடிக்கப்படும். நாட்டில் தடையின்றி சமையல் காஸ் கிடைக்கவும் நுகர்வோர் எளிதாக சமையல் கால் சிலிண்டர் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் 2016, 2017, 2018-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். அதற்கேற்ப மத்திய அரசு முனைப்புடன் செயல்படும்.

சமையல் காஸ் சிலிண்டரை பயன்படுத்தும்போது கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுபற்றி உடனடியாக அவசர உதவி எண் 1906-ஐ தொடர்பு கொள்ளலாம். இது நாடு முழுவதுக்கும் பொதுவான எண் ஆகும்.


இந்த எண்ணில் இலவசமாக தொடர்பு கொள்ள அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போதைய நிலையில் இந்த எண்ணை பயன்படுத்தினால் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும்.

நாட்டில் தற்போது 27 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 16.5 கோடி பேர் தொடர் வாடிக்கையாளர்கள். மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக பயன்பெறுகின்றனர் 100 சதவீத மக்களும் சமையல் காஸ் இணைப்பு பெறவேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுகிறது. ஆனால் அந்த செலவை அவர்கள் தாங்கக்கூடியவர்களாக இருப்பார்களா எல்லா இடங்களுக்கும் சமையல் காஸ் கிடைக்குமா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் பொருளாதாரம் உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்போது பெருவாரியான மக்கள் சமையல் காஸ் இணைப்பு வசதி பெற முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைனில் பணம் செலுத்தலாம்
சமையல் காஸ் சிலிண்டர் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் வசதியையும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார். இது சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

மானியமில்லா எல்பிஜி கட்டணம் உயர்வு
இதனிடையே மானியமில்லா சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.50 அளவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர்த்தியுள்ளது. இந்த விலைஉயர்வு 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

உள்ளூர் வரிவிதிப்பையும் சேர்த்தால் மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் சந்தை விலை டெல்லியில் ரூ. 657.50, கொல்கத்தாவில் ரூ. 686.50, மும்பையில் ரூ. 671, சென்னையில் ரூ.671.50 ஆக இருக்கும்.

கடந்த 2 மாதங்களில் இரண்டாவது முறையாக மானியம் இல்லா சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் ரூ. 60 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.