சுப்ரீம் கோர்ட்டின், 43வது தலைமை
நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று
பதவியேற்றார்.சுப்ரீம் கோர்ட் தலைமை
நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று
முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில்
நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை
நீதிபதியாக, டி.எஸ்.தாக்குர் பதவியேற்றார்.
அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்
பிரமாணம் செய்து வைத்தார்.இவ்விழாவில்,
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்
ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி,
சதானந்த கவுடா, ஹர்ஷவர்த்தன், ஸ்மிருதி
இரானி மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்
அத்வானி, எம்.பி.,க்கள், சுப்ரீம் கோர்ட்டின்
முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்
உட்பட, பலர் பங்கேற்றனர். டி.எஸ்.தாக்குர்,
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்;
இவரது தந்தை, டி.டி.தாக்குர், காஷ்மீர் துணை
முதல்வராகவும், ஐகோர்ட் தலைமை
நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
கடந்த 1972ல், ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில்,
பிளீடராக பணியைத் துவக்கிய, டி.எஸ்.தாக்குர்,
1994ல், கூடுதல் நீதிபதியாகவும், அதன்பின்,
கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாகவும்
நியமிக்கப்பட்டார்.டில்லி, பஞ்சாப் மற்றும்
ஹரியானா மாநில ஐகோர்ட்களில் நீதிபதியாக
பணியாற்றிய டி.எஸ்.தாக்குர், 2009ல், சுப்ரீம்
கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்
தலைமையிலான அமர்வு தான், கிரிக்கெட்
சூதாட்டம், மேற்கு வங்க சாரதா சிட் பண்ட்
ஊழல், உ.பி., முன்னாள் அமைச்சர் பாபு சிங்
குஷ்வஹா மீதான ஊழல் வழக்குகளில், அதிரடி
உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தலைமை
நீதிபதியாக பதவியேற்றுள்ள தாக்குரின் பதவிக்
காலம், 2017 ஜனவரி, 4 வரை உள்ளது.