பள்ளிகளுக்கு டிசம்பர் 24 (வியாழன்) முதல் ஜனவரி 1-ம் தேதி வரை தொடர்
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு
மட்டும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
வழக்கமாக டிசம்பர் 3-வது வாரத்தில் 10 நாட்களுக்கு அனைத்துப்
பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுவது வழக்கம். இதில்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின விடுமுறைகளும் அடங்கிவிடும். ஆனால், இந்த
ஆண்டு டிசம்பரில் நடைபெறுவதாக இருந்த அரையாண்டுத்தேர்வுகள் மழை வெள்ளப்
பாதிப்பை கருத்தில்கொண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஜனவரி 11 முதல் 27-ந்
தேதி நடைபெறும் என்றும் மற்ற வகுப்புகளுக்கு ஜனவரி 11-ந் தேதி தேர்வுகள்
தொடங்கும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதால் இந்த ஆண்டு அதற்குரிய விடுமுறை
இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மத்தியில் இருந்து வந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர்
எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது, 2015-16-ம் கல்வி ஆண்டில் காலண்டர் விடுமுறை
நாட்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டபடி விடுமுறை நாட்களாகத்தான் இருக்கும்.
எனவே, இந்த அட்டவணை விடுமுறைக்கு தனியே அறிவிக்கத் தேவையில்லை” என்றார்.
காலண்டர் விடுமுறையின்படி 24-ந் தேதி முதல் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்
தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விடுமுறை நாட்களில் பிளஸ்-2 மற்றும் எஸ்எஸ்எல்சி
மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி,
விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட தினங்களில் பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும். சென்னை மாவட்டத்தில் வருகிற
28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு
மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரி அனிதா தெரிவித்தார்.