'அம்மா உத்தரவு படி, சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துஉள்ளது' என, பேட்டிளித்த, கலெக்டர் சம்பத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'அம்மா உத்தரவின் நகலை தாருங்கள்' என, சமூக ஆர்வலர் மனு செய்துள்ளார்.
சேலம் கலெக்டர் சம்பத், சமீபத்தில் பத்திரிகை யாளர்களுக்கு, பேட்டி அளித்தபோது, 'முதல்வர் அம்மா உத்தரவின் படி, சேலம் மாவட்டத்தில் மழை அதிக அளவு பெய்துள்ளது' என்றார்; இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; சமூக வலைதளங்களில், அந்த காட்சிகள் பகிரப்பட்டு, பலரும் கிண்டலடித்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கோ.ரா.ரவி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சேலம் கலெக்டருக்கு, மனு அனுப்பி உள்ளார். அதில், 'உங்கள் பேட்டியை, 'டிவி'யில் பார்த்தேன். முதல்வர் உத்தரவின் படி மழை பெய்ததாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கான முதல்வரின் உத்தரவு நகலை தாருங்கள்' என,கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு, கலெக்டர் சம்பத் என்ன பதில் அளிக்கப்போகிறார் எனத் தெரியவில்லை.