சென்னை: தனது 2 கைகளை இழந்தும், படிப்பை
நிறுத்தாமல் தொடர்ந்த தமிழக இளம்பெண்ணுக்கு
சிறந்த பெண் தலைவி விருதை அமெரிக்க தொண்டு
நிறுவனம் வழங்கியுள்ளது. கும்பகோணத்தை
சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி
ஹேமாமாலினி. இவர்களது மகள் மாளவிகா (27).
கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில்
வேலை கிடைத்ததால், கிருஷ்ணன், குடும்பத்துடன்
அங்கு சென்றார். தற்போது, குடிநீர் வாரிய
அதிகாரியாக வேலை பார்க்கிறார். கடந்த 2003ம்
ஆண்டு மாளவிகா 8ம் வகுப்பு படித்தார். அந்த
நேரத்தில் கார்கில் போர் நடந்தது. அதில்
உபயோகப்படுத்தாத வெடிகுண்டு, இவர்களின்
வீட்டின் அருகே கிடந்தது. அதை பார்த்த மாளவிகா,
கையில் எடுத்து விளையாடியபோது, எதிர்பாராத
விதமாக வெடிகுண்டு வெடித்தது. இதில், மாளவிகா
தனது 2 கைகளையும் இழந்தார். கால்களும்
சேதமானது.
இயைதடுத்து ஜெய்ப்பூரில் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர்,
சென்னையில் வசிக்கும் ஹேமாமாலினியின் தாய்
வீட்டுக்கு, அவரை அழைத்து வந்தனர். சென்னை
அண்ணாநகரில் உள்ள தனியார் எலும்பு முறிவு
மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இதனால், மாளவிகாவின் படிப்பு பாதியில்
நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளாக படிக்க முடியாமல்
இருந்த அவர், தன்னுடன் படித்த சக நண்பர்கள் 10ம்
வகுப்பு தேர்வு எழுதுவதை நினைத்து வேதனை
அடைந்தார். இதனால் கிருஷ்ணன், அண்ணா நகர்
பகுதியில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரை
அணுகினார். அப்போது, மாளவிகாவை தனி தேர்வராக
தேர்வு எழுத செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர்.
அதன்படி அவருக்கு 3 மாதம் பயிற்சி அளித்தனர்.
அவரும், 500க்கு 483 மதிப்பெண் பெற்று தனி தேர்வர்
வரிசையில் மாநிலத்தில் முதல் மாணவியாக
தேர்ச்சியடைந்தார். இதையடுத்து மாணவி
மாளவிகாவை பாராட்டி, அப்போதைய முதலமைச்சராக
இருந்த திமுக தலைவர் கருணாநிதி, மாணவி
மாளவிகாவுக்கு ₹1 லட்சம் பரிசு வழங்கினார்.
இதை தொடர்ந்து பிளஸ் 2, இளங்கலையில் பிஏ,
முதுகலையில் எம்.எஸ்.டபுள்யு (சமூக சேவை),
எம்பில் முடித்தார். தற்போது, பிஎச்டி படித்து
வருகிறார். கைகளை இழந்தாலும், தனது
தன்னம்பிக்கையில் உறுதியாக இருந்து இதுவரை
படித்து சாதனை படைத்து வரும் மாளவிகாவுக்கு,
அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரில் செயல்படும்
தொண்டு நிறுவனம் சார்பில், பாராட்டு விழாவும்,
‘சிறந்த பெண் தலைவி’ என்ற சாதனையாளர் விருதும்
வழங்கப்பட்டது.
இதுகுறித்து மாளவிகா கூறுகையில், ‘எனது கைகள்
இழந்தாலும், கால்கள் சேதமடைந்து போனாலும்,
சமூக சேவை செய்வதே எனது நோக்கமாக
கொண்டுள்ளேன். என்னை போல் பலர்
பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான
உதவிகளை செய்ய வேண்டும் என்பதே எனது
லட்சியம்,’ என்றார்.